search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை உயர்வு"

    • விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.
    • காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலுக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகள்தான் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த சில வாரங்களாக கோடை அனல் வெயில் கொளுத்தி வருவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தோட்டங்களில் பயிரிட்டு உள்ள விளைபொருட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து மட்டுமே காய்கறிகள் வரத்து இருப்பதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200, அவரை-ரூ.180, கேரட்-ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.80, முருங்கைக்காய் ரூ.200, ப்ரக்கோலி ரூ.240 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.


    இனிவரும் நாட்களில் கடும் வறட்சி ஏற்பட்டு வெயில் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளதால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். நீலகிரி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளதால், கவலை அடைந்து உள்ள இல்லத்தரசிகள், தமிழக அரசு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் காஞ்சி பட்டு சேலைகள் உலகப் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. மத்திய அரசின் புவிசார் குறியீட்டை பெற்றுள்ள காஞ்சி பட்டு சேலைகள் சிறப்பு அம்சங்களை கொண்டவையாக திகழ்கின்றன.

    தங்கம், வெள்ளி ஜரிகைகளை கோர்த்து செய்யப்படுவதால் 25 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சி பட்டு சேலைகள் தனித்துவம் பெற்றவையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் காஞ்சி பட்டு சேலைகளின் வியாபாரமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ரூ.300 கோடி அளவுக்கு பட்டு சேலைகள் விற்பனையாகின்றன.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் ஏரிக்கரையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தியாகும் ஜரிகையில் 0.5 சதவீதம் தங்கம், 40 சதவீதம் வெள்ளி, 35.5 சதவீதம் காப்பர், 24 சதவீதம் பட்டு இழை ஆகியவை சேர்க்கப்படும்.

    ஒரு பாக்கெட்டில் 242 கிராம் அளவுக்கு ஜரிகை இருக்கும். 5 கட்டைகளில் சுற்றப்பட்டுள்ள இந்த ஜரிகையை ஒரு மார்க் என்று அழைப்பார்கள். இந்த ஒரு மார்க் ஜரிகை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் தங்கம்-1.210 கிராம், வெள்ளி-96.8 கிராம், காப்பர்-85.91 கிராம், சில்க்-58.08 கிராம் சேர்க்கப்பட்டிருக்கும்.

    தங்கம், வெள்ளி விலை உயர்வால் பட்டு சேலைகள் விலையை 30 சதவீதம் அளவுக்கு உற்பத்தியாளர்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளனர். காஞ்சி பட்டு சேலைகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக ஜரிகை விலை உயர்ந்து பட்டு சேலைகளின் விலையும் அதிகரிப்பதால் விற்பனை பாதிக்கப்படும் என்று பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    விற்பனை பாதிக்கப்படும் பட்சத்தில் பட்டு சேலைகள் தேக்கம் அதிகமாகி உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் நெசவாளர்களுக்கு எப்போதும் போல வேலையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஒரு மார்க் ஜரிகை ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.20 ஆயிரமாக விலை உயர்ந்து உள்ளது. ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    தேர்தல் காரணமாக கடந்த 1½ மாதமாக பட்டு சேலைகள் வியாபாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம், வெள்ளி விலையேற்றமும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்த பட்டு சேலை ரூ.15 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், இப்படி அனைத்து ரக சேலைகளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

    • கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். கோடை சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாநிலங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த சில நாட்களாகவே 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடைகளில் எலுமிச்சை பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத்தை பலர் விரும்பி குடித்து வருகிறார்கள். இதனால் சாலையோரங்களிலும் எலுமிச்சை சர்பத் கடைகள் பல இடங்களில் முளைத்து உள்ளன.

    • வருகிற 19-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.
    • தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    பல்லடம்:

    தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில், தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.95 வரை செலவாகிறது. வருகிற 19-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க கடந்த 3 நாட்களாக போட்டியிடும் கட்சியின் நிர்வாகிகள் தங்கள் தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    இவ்வாறு வாக்கு சேகரிக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்சி பொறுப்பாளர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்ற ஆங்காங்கே சுடச்சுட, கமகம என சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகியவற்றை தயாரித்து நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக கறிக்கோழி பண்ணைக்கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதன்படி 24 -ந்தேதி ரூ.111 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) 27-ந்தேதி ரூ.120, 28-ந்தேதி ரூ.125, 29-ந் தேதி ரூ.130 ஆக உள்ளது. 5 நாட்களில் கிலோவிற்கு ரூ.19 அதிகரித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இறைச்சி கடைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.210 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது கிலோ ரூ.260 முதல் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் இந்த விலை மாறுபடுகிறது. தேர்தல் காரணமாக கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலையும், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

    • கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிப்பூ தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இந்தியன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    சாமந்தி - ரூ.150 முதல் ரூ.220 வரை, மல்லி - ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.80 முதல் ரூ.100வரை, சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரை, அரளி - ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம் - ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500.

    • கேரளாவின் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார்.
    • பா.ஜ.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டிய நேரம் இது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் எக்ஸ் தளத்தில், பா.ஜ.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டிய நேரம் என பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் நிலவும் விலைவாசி உயர்வு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பால் 34 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 58 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ டீத்தூள் 143 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 284 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ சர்க்கரை 30 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை 413 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 903 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ இஞ்சி 63 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ ஏலக்காய் 557 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 1113 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    • எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையோர கடைகளில் குளிர்பானம், எலுமிச்சை சாறு, கரும்புசாறு குடித்தும் தர்பூசணி உள்ளிட்ட நீர்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட்டும் வருகின்றனர்.

    சுட்டெரிக்கும் வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கிலோ ரூ.150 வரை விற்பனை ஆகிறது. மேலும் கடைகளில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, எலுமிச்சை அதிகளவில் உற்பத்தி நடந்து வரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் எலுமிச்சை பழத்தின் தேவையும் அதிகரித்து அதன் விலை மேலும் உயரும் என்றனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி விற்பனைக்கு குவிந்தன. இதனால் பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் விலை வீழ்ச்சி அடைந்து இன்று கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. கேரட் கிலோ-ரூ.25, பீட்ரூட்-ரூ.30, அவரைக்காய்-ரூ.10, வரி கத்தரிக்காய்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.20 க்கு விற்பனை ஆனது.

    • பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.
    • கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், பெரு ந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபிசெட்டிபாளையம் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தங்கம் விலைக்கு இணையாக மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, பல மாநிலங்களில் போதிய மழை இன்மை போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து ஈரோடு மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    அதன்பின் கடந்த 6 மாதங்களாக குவிண்டால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36-க்கு விற்பனையானதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 678 முதல் ரூ.16 ஆயிரத்து 36 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 599 முதல் ரூ.13 ஆயிரத்து 800 வரையும் விற்பனையானது.

    இங்கு கொண்டுவரப்பட்ட 3 ஆயிரத்து 387 மஞ்சள் மூட்டைகளில் 1,938 மூட்டைகள் ஏலம் போன தாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.13 ஆயிரத்து 799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.11 ஆயிரத்து 133 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 545 முதல் ரூ.15 ஆயிரத்து 89 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயி ரத்து 889 முதல் 13 ஆயிரத்து 739 வரையும் விற்பனையானது. இதைப்போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 633 முதல் 15 ஆயிரத்து 499 வரையும், கிழ ங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 556 முதல் ரூ.13 ஆயிரத்து 519 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-தற்போது கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. இதற்கு தரத்தின் அடிப்படையில் சற்று விலை அதிகமாக கிடைக்கிறது.

    பழைய மஞ்சள் இருப்பில் இருந்தவை ரூ.9 ஆயிரத்துக்கு விலை போகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் புதிய மஞ்சள் அறுவடையாகவில்லை. சில மஞ்சள் புதிய ரகம் பெரு வட்டாக வரத்தாகி ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயி ரத்து 36 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐஸ்கிரீம் உள்பட பால் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    கோடை காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களுக்கு வழக்கத்தை விட தேவை அதிகரிக்கும்.

    தற்போது கோடை காலம் உச்சத்தை எட்ட தொடங்கி இருக்கிறது. அடுத்த வாரம் முதல் வெயில் அளவு கடுமையாக உயரும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் ஐஸ்கிரீம் விற்பனை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் 4 வகையான ஐஸ்கிரீம் விலையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோ பார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25ஆக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

    100 எம்.எல். எடை கொண்ட கிளாஸ்சிக் கோன் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது போல கிளாஸ்சிக் கோன் சாக்லெட் ஐஸ்கிரீமும் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.

    ஐஸ்கிரீம் விலை உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் நாளை (3-ந் தேதி) முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

    அத்துடன் பால் வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது.
    • டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    திருச்சி:

    காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் டெல்டாவில் நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    திருச்சி மொத்த மார்க்கெட்டில் 26 கிலோ எடை கொண்ட மணச்சநல்லூர் பொன்னி அரிசி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 1290க்கு விற்கப்பட்டது. இன்றைக்கு அதன் விலை ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது.

    சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று அட்சயா பொன்னியின் விலை ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று இட்லி அரிசி உள்பட அனைத்து வகையான அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது.

    திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக திருச்சியில் மணச்சநல்லூர் பொன்னி ரூ. 1500 க்கு கிடைக்கிறது. இதுவே சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் ரூ.1600 முதல், ரூ. 1700 வரை விற்கப்படுகிறது.

    இந்த விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றத்திற்கு டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    இது தொடர்பாக திருச்சி உறையூர் கற்பகம் அரிசி மண்டி உரிமையாளர் குணசேகரன் கூறும்போது, திருச்சியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு முன்பெல்லாம் பெங்களூரில் இருந்து அதிக அளவு நெல் வரும்.

    தற்போது இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கிருந்து வரும் நெல் வரத்து சரிந்துவிட்டது. காவிரி டெல்டாவிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி உற்பத்தி குறைந்து விலை உயர்ந்து விட்டது என்றார்.

    மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறும் போது, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படும்.

    காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடி 10 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

    அதிலும் திருச்சி, கரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 5 சதவீதம் கூட சம்பா சாகுபடி செய்யப்படவில்லை. 1890க்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் காவிரியில் 50,000 ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டது.

    அதன் பின்னர் 1924 களில் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரிடப்பட்டது.

    ஆனால் இன்றைக்கு கர்நாடகா காவிரியின் குறுக்கே 5 அணைகள், 30 ஆயிரம் ஏரிகள் அமைத்ததால் 30 லட்சம் ஏக்கரில் அங்கு சம்பா பயிரிட்டுள்ளார்கள். காவிரி டெல்டாவில் முன்பெல்லாம் முப்போக சாகுபடி இருக்கும்.

    இப்போது ஒரு போகத்திற்கு விவசாயிகள் தள்ளாடுகின்றனர். ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் சம்பா சாகுபடியும் சுருங்கிவிட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.

    இதற்கிடையே அரிசி ஆலை அதிபர் ஒருவர் கூறுகையில், நடப்பு ஆண்டில் அதிகளவு சாப்பாட்டு அரிசியான சன்ன ரக நெல்களை அரிசி உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

    இதனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் சரிந்துள்ளது.

    இந்த கால கட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசின் கையிருப்பில் பல லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இப்போது 50 ஆயிரம் டன் நெல் இருப்பு இருக்குமா என்பது கூட சந்தேகமாக உள்ளது. ஆகவே வருங்காலத்தில் ரேசன் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விலை குறைவாக இருக்கும் காரணத்தினாலும், நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டு வந்த காரணத்தாலும் தனியார் அரிசி ஆலை அதிபர்கள் நெல்லை பதுக்கி உள்ளனர். ஆகவே வருங்காலங்களில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

    • அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆனாலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 முதல் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூண்டு பதுக்கப்பட்டுள்ளதா? இதனால் விலை உயர்ந்துள்ளதா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்தும் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி ஒருவர் கூறுகையில், வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பூண்டு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. இதனால் பூண்டு விளைச்சல் 4-ல் ஒரு மடங்காக குறைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்கெட்களுக்கு பூண்டு வரத்து தற்போது வரை அதிகரிக்கவில்லை.

    சென்னை கோயம்போடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு தற்போது 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதே போல சேலம் மார்க்கெட்டுகளுக்கும் 4-ல் ஒரு பங்காக பூண்டு வரத்து குறைந்துள்ளது. தற்போது பூண்டு அறுவடை காலம் தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும். பூண்டுகளை பதுக்கினால் அழுகிவிடும், இதனால் பதுக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது.
    • சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பூ மார்க்கெட்டுக்கு நிலக் கோட்டை, அருப்புக் கோட்டை, உசிலம்பட்டி, ஈரோடு, ஓசூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    இப்போது பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

    இந்நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாள் என்பதால் நேற்று அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    இதனால் பூ விற்பனைகளை கட்டியது. வரத்து குறைந்து இருந்த நிலையில் தேவை அதிகரித்ததால் மல்லி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் திடீரென உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மல்லி ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ மல்லி ரூ.1500வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளில் மல்லி விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் எகிறியது. கனகாம்பரம் ரூ.700-க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமந்தி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.150முதல் ரூ.200வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை (கிலோவில்) வருமாறு:-

    சம்பங்கி-ரூ.100, அரளி-ரூ.150, ஜாதி-ரூ.800 சாமந்தி-ரூ.150, பன்னீர் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா-ரூ.120.

    ×